தொழில் வளர்ச்சியில் திமுக அரசு படுதோல்வி: அன்புமணி ராமதாஸ்


தொழில் வளர்ச்சியில் திமுக அரசு படுதோல்வி: அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 4 Oct 2024 6:26 AM GMT (Updated: 4 Oct 2024 6:43 AM GMT)

தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு நேற்று தெரிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் தொழில்துறையில் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் அளவுக்கு சாதனைகளை படைக்கப்பட்டிருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் இந்த புள்ளி விவரங்களின் மூலம் உண்மை நிலை அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; அதன் மூலம் 891 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதுடன் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் முதல்-அமைச்சர் தொடர்ந்து கூறிவந்தார். முதல்-அமைச்சர் தெரிவித்த புள்ளிவிவரங்கள் சரியானவை என்றால், தமிழக அரசு நேற்று வெளியிட்ட சாதனை அறிக்கையில் புள்ளிவிவரங்கள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன. இதுதான் திமுக அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியுள்ளன. இதன் மூலம் தனது மோசடியை திமுக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஒரு வாதத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 46 தொழிற்சாலைகளுமே திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று வைத்துக் கொண்டாலும் கூட, திமுக சாதித்து விட்டதாக கூறும் உயரத்திற்கும், உண்மையில் எட்டப்பட்ட உயரத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிக அதிகமாகும்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்கி விட்ட திட்டங்களின் எண்ணிக்கை 234. ஆனால், அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி திறக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 46 மட்டுமே. அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 891 திட்டங்களில் 5 சதவீதம் மட்டுமே நிறைவேறியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடுகளின் மூலம் 31 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக அரசு பெருமை கொள்வது போன்று 60% தொழில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் 18.60 லட்சம் பேருக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலை கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசின் சார்பில் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் ( செய்தி வெளியீடு எண்:1481) தனியார் நிறுவனங்களில் 5 லட்சத்து 8,055 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் 46 தொழிற்சாலைகள் மூலம் ஒரு லட்சத்து 39,725 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 தகவல்களில் எது உண்மை?

தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழ்நாட்டை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்ல வேண்டியிருக்கும் என்பார்கள். தமிழக அரசும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. பொய்களால் கட்டப்பட்ட கோட்டை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story