காவல்துறையினருடன் தே.மு.தி.க.வினர் வாக்குவாதம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு


காவல்துறையினருடன் தே.மு.தி.க.வினர் வாக்குவாதம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
x

விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

புதுடெல்லி,

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2-ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கெளரவித்தார்.

அப்போது விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார். அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க.வினர் குவிந்தனர். இதையடுத்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை தடுக்க முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளை தள்ளிவிட்டு தே.மு.தி.க.வினர், காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், வாகனப் பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தே.மு.தி.க.வினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story