நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறு: மனைவி, மகளுக்கு கத்திக்குத்து - கணவன் வெறிச்செயல்


நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறு: மனைவி, மகளுக்கு கத்திக்குத்து - கணவன் வெறிச்செயல்
x

நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மகளை, கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே லாரி டிரைவர் தனசேகரன் - யாசினி தம்பதியினர் சாந்தினி, ஷபானா ஆகிய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் யாசினி வெளியில் சென்று நுங்கு வாங்கி வந்துள்ளார்.

அப்போது ஏன் அதிகளவு நுங்கு வாங்கி வந்தாய் என்று தனசேகரன் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தனசேகரன், திடீரென மனைவி யாசினியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். தடுக்க முயன்ற மகள் சாந்தினியையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் யாசினியும், சாந்தினியும் உயிருக்குப் போராடிய நிலையில், அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தனசேகரனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். யாசினி மற்றும் சாந்தினி இருவருக்கும், அரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனசேகரனை ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story