சதுரகிரியில் பெய்த சாரல் மழை; பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


தினத்தந்தி 29 May 2022 11:54 AM GMT (Updated: 29 May 2022 11:56 AM GMT)

தொடர் விடுமுறையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆயிரங்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

விருதுநகர்:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தொடர் விடுமுறை என்பதால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு அதிகாலை முதலே வருகை தந்தனர்.

இந்நிலையில் அதிகாலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காலை 11.50 மணி அளவில் வனப்பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கேட் மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டிருக்க முன்பு காத்திருந்தனர். இந்த சாரல் மலையானது சுமார் 15 நிமிடங்கள் பெய்தது.

இதனையடுத்து வனத்துறை கேட்டிருக்கும் முன்பு காத்திருந்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீண்ட காத்திருப்புக்கு பின் பக்தர்கள் வனத்துறைகேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்து திரும்பி சென்றனர்.


பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரப் பகுதிக்கு வந்த பக்தர்கள் வனப் பகுதியில் பெய்த மழையில் நனைந்தபடி வந்தனர்.



Related Tags :
Next Story