ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு


ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு
x

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ., பி.பி.ஏ. படித்திட வழிவகை செய்யப்படும். பிளஸ்-2 வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களுக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் டிசைனிங் படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக் கழகத்தில் இன்டர்கிரேட் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் 2022-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய தாட்கோ மேலாளரை நேரிலோ அல்லது 04322-221487 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story