மாணவி பிரியா மரணம் - ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள் மௌன அஞ்சலி


மாணவி பிரியா மரணம் - ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள் மௌன அஞ்சலி
x

தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா, ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த மாதம் 20ம் தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவி படித்த ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் இன்று காலை மெளன அஞ்சலி செலுத்தினர்.


Next Story