தர்மபுரியில், திருமண நிச்சயம் நடக்க இருந்த இளம்பெண் மர்மசாவு போலீசார் விசாரணை


தர்மபுரியில், திருமண நிச்சயம் நடக்க இருந்த  இளம்பெண் மர்மசாவு  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:48 PM GMT)

தர்மபுரியில், திருமண நிச்சயம் நடக்க இருந்த இளம்பெண் மர்மசாவு போலீசார் விசாரணை

தர்மபுரி

தர்மபுரியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபருடன் காதல்

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் பிரியா (வயது 24). டிப்ளமோ முடித்துள்ள பிரியா தர்மபுரியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் சுரேஷ் என்ற வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுரேசின் குடும்பத்தினர் தங்கவேலை தொடர்பு கொண்டு பிரியாவை பெண் கேட்டனர். இதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) பிரியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

மர்ம சாவு

இந்த நிலையில் பிரியா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்பிய போது படுக்கையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. இதுதொடர்பாக போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயம் நடக்க இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story