ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டி மருமகள் பாலியல் பலாத்காரம்: மாமனார் கைது
இளம்பெண்ணின் கணவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.
சென்னை,
சென்னை அருகே ஆழ்வார்திருநகர் மீனாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் 21 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் ஆழ்வார்திருநகரில் உள்ள திருவள்ளுவர் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பெயிண்டரான இளம்பெண்ணின் கணவர் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார். மகனுக்கு திருமணமான நாளில் இருந்தே மருமகள் மீது மாமனார் சரவணன் ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்துள்ளார். பெயிண்டரான அவரும் மருமகள் தனியாக வீட்டில் இருக்கும் நேரங்களில் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் மதியம் தனது 2 வயது மகனுடன் மருமகள் மீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாமனார் சரவணன் ஆசிட் பாட்டில் மற்றும் பிளேடு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் திடீரென வீட்டுக்குள் புகுந்த அவர் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மருமகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மருமகள் மாமனாரின் காமுக பிடியில் இருந்து தப்ப முயன்றார். அப்போது மறைத்து வைத்திருந்த ஆசிட் மற்றும் பிளேடை எடுத்துகாட்டி மிரட்டினார். நான் சொல்கிறபடி கேட்டு ஒத்துழைக்காவிட்டால் ஆசிட்டை ஊற்றி பிளேடால் வெட்டிவிடுவேன் என்று மிரட்டி மருமகள் கூட என்று பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்தார். இப்படி மருமகளை மிரட்டி பாலியல் உறவு கொண்ட சரவணன் யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதுபற்றி கோயம்பேடு மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சரவணன் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் மருமகளை மிரட்டி கொடூரமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மாமனார் சரவணனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.