தாய் இறந்த சோகத்தில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை


தாய் இறந்த சோகத்தில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை
x

தாயார் இறந்ததில் இருந்து சுகன்யா மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.

தஞ்சை,

தஞ்சை வடக்கு வீதியில் உள்ள தெலுங்கு செட்டி தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மனைவி பிரேமாவதி. இவர்களுக்கு சுதாகர் என்ற மகன் உள்ளார். சுகன்யா (வயது 36) என்ற மகள் இருந்தார்.

திருமணம் ஆகாத சுகன்யா, தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரேமாவதி இறந்து விட்டார். தனது தாயார் மீது அதிக பாசம் கொண்ட சுகன்யா, தாயார் இறந்ததில் இருந்து மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.

தனது தாயார் இல்லாத ஒரு வாழ்க்கையை தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத சுகன்யா, தனது தாயார் சென்ற இடத்துக்கே தானும் சென்று விடுவதென முடிவு செய்தார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுகன்யா அறையில் இருந்த மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சுகன்யாவின் சகோதரர் சுதாகர் தஞ்சை மேற்கு போலீசிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இறந்த சோகத்தில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story