'தினத்தந்தி' செய்தி எதிரொலி: சாலை நடுவில் குவிந்து கிடந்த மண் குவியல் அகற்றம்


தினத்தந்தி செய்தி எதிரொலி:  சாலை நடுவில் குவிந்து கிடந்த மண் குவியல் அகற்றம்
x

சாலை நடுவில் குவிந்து கிடந்த மண் குவியல் அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருவதோடு தினத்தந்தி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ராஜாஜிபுரம் டாக்டர். மு.வ.சாலையின் நடுவில் இருக்கும் பாதாள சாக்கடை மூடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமானது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் அதை அகற்றி புதிய மூடியை அமைத்தனர். அதன் மீது வாகனங்கள் செல்லாதவாறு சிமெண்ட் கலவைகள், கற்களை பாதாள சாக்கடை மூடி மீது குவித்து வைத்திருந்தனர்.

ஆனால் அவை சரி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலையின் நடுவே கொட்டப்பட்ட கற்கள் சிமெண்ட் கலவைகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து வந்தது.

இதனால் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அத்துடன் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தனர். இதையடுத்து சிமெண்ட் குவியல் மற்றும் கற்களை அகற்ற கோரி தினத்தந்தி நாளிதழில் கடந்த 3-ந்தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் சாலை நடுவில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருவதோடு தினத்தந்தி நாளிதழுக்கு நன்றி தெரிவித்த னர்.


Next Story