கடலூர்: ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம்: விரிவான விசாரணைக்கு உத்தரவு


கடலூர்: ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம்: விரிவான விசாரணைக்கு உத்தரவு
x

7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.

இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உயிர் பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர். அவர்கள் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் 7 பேரும் ஏற்றி செல்லப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணை பகுதியில் பள்ளம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், மண்ணின் தன்மை குறித்தும் விசாரணை நடைபெறும்" என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story