பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு


பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறை என்ற இடத்தில் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வெடி விபத்தில் சிக்கிய சிலரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குருமூர்த்தி என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உராய்வு ஏற்பட்டு இந்த வெடி விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குருமூர்த்திக்கு ரூ.2 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story