கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து


கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து
x

கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா? அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

நாமக்கல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது.

இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது.

பொதுமக்கள் அச்சம்

இந்தத் தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர்கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாபநிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாகப் புரட்டி போட்டது கொரோனா.

தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்துவிட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.

பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போதுகூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

இணை நோய்கள்

கொரோனா தீவிரமாக பரவி வந்த போது, அதன் சிகிச்சைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றிய கதிரியக்கத் துறை நிபுணர் டாக்டர் வி.ஆனந்தகுமார் கூறும் போது, 'கொரோனா வைரஸ் பெரும் கொள்ளை நோயாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களின் வாழ்வியல் பாதிப்பு, தேக்க நிலைகளை உண்டாக்கியது. ஆனால் தற்போது 3-ம் நிலையில் பெரிய அளவில் கொரோனாவால் பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் சாதாரணமாக வரும் சளி, காய்ச்சல் போன்று கொரோனா உருமாறி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இப்போதும் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை மற்றும் இறப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சீனாவில் கொரோனா இருக்கக் கூடாது என்ற அந்த நாட்டு அரசின் திட்டத்திற்கு ஏற்ப பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பது மற்றும் இறப்பு போன்றவை குறைவாக இருக்கிறது. பொதுவாக தொற்று வந்து போனதற்குப் பிறகு இயற்கையில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பு ஊசி போட்டதற்கு பிறகு ஏற்படும் எதிர்ப்பு சக்தி இந்த இரண்டும் இருந்தால் நல்லது. நம் நாட்டில் பொதுமக்களிடம் எதிர்ப்பு சக்தி உள்ளது. வரும் காலங்களில் எதிர்ப்பு சக்தி குறையும் போது பல இடங்களில் பூஸ்டர் என்ற தடுப்பு ஊசி போடப்படலாம். ஆனால் 3-ம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு வராததால் பூஸ்டர் போடுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. இருந்தாலும் நாமும் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சோதனைகளுக்கு செல்லும் போதும் முக கவசத்தை அணிந்து செல்வது நல்லது. ஆனால் பொதுமக்களுக்கு இதுகுறித்து பயம் தேவையில்லை. முன்பரிசோதனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறையில் நாம் பலம் வாய்ந்து இருப்பதால் பொதுமக்களுக்கு வாழ்வியல் பாதிப்பு, கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. காற்றில் பல வித தொற்றுகள் இருப்பதால் புதிய வாழ்வியல் முறையாக முக கவசம் எப்போதும் அணிவது நல்லது. அதேபோல் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய தற்காப்பு முறைகளை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். அதேநேரம் எதிர்ப்பு சக்தியை முறையாக பராமரிப்பது, இணை நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்' என்றார்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

நாமக்கல் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது. நமது மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளே இல்லை. இதற்கு முக்கிய காரணமாக பெரும்பாலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை கூறலாம். இந்த தடுப்பூசி காரணமாக பொதுமக்கள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி (இம்யூனிட்டி) அதிகரித்து உள்ளது. ஒருவேளை கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

பொதுமக்களை பொறுத்த வரையில் முககவசம் அணிவது எப்போதும் அவர்களுக்கு நன்மை தரும். குறிப்பாக தொற்று நோய்கள் பலவற்றில் இருந்து முககவசம் நம்மை காக்கும். இதேபோல் கைகளை சுத்தமாக கழுவும் பழக்கமும் நோய் வராமல் தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

முககவசம் அணிவது நல்லது

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்தி:-

தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளது. இருந்தாலும் நோயின் தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பங்கு கொள்வதை தவிர்ப்பது நல்லது.

சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் அனைவருக்கும் நல்லது.

மாணவர்களுக்கு அறிவுரை

நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன்:-

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், அது முற்றிலும் நம்மை விட்டு போய்விட்டது என்று கூறமுடியாது. எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிவது நல்லது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது பிறர் தும்மினாலும், இருமினாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவிவிடும்.

எக்காரணம் கொண்டும் கைகளை சுத்தம் செய்யாமல் கண், மூக்கு, வாய் போன்றவற்றை தொடக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் முற்றிலுமாக கொரோனா ஒழிந்து விட்டது என்று கூறும் வரை முகக்கவசம் அணிய வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

சளி, காய்ச்சல் தொல்லை

சேந்தமங்கலத்தை சேர்ந்த விவசாயி அய்யாவு:-

சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலருக்கும் தற்போதைய சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எளிதில் சளி மற்றும் காய்ச்சல் தொல்லை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

மேலும் சேந்தமங்கலம் தாலுகாவாக உயர்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் இங்குள்ள அரசு மருத்துவமனையில் உயர்தரமான உபகரணங்கள் குறைவாகவே உள்ளது. சில பிரிவுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் இல்லை. அவற்றை முற்றிலுமாக நீக்கி அனைத்து அம்சங்களும் கூடிய மருத்துவமனையாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

நுரையீரலை பாதுகாக்க வேண்டும்

நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சுதாகர்:-

கொரோனா வைரஸ் அருகில் இருப்பவர்களுடன் பேசும்போதும், இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலமும் பரவும் தன்மை கொண்டது. எனவே காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால், அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் ஆலோசனை பெற்று தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் போது கைகளை நன்றாக கழுவி கொள்வது வைரஸ் பரவாமல் தடுக்க வழிவகுக்கும்.

நோயால் மட்டும் அல்லாமல் சுற்றுப்புறசூழல் மாசு காரணமாகவும் நுரையீரல் கெட்டு போவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே நுரையீரலை பாதுகாக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story