விழுப்புரம் மாவட்டத்தில்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலம் 6,200 கர்ப்பிணிகள் பயன்கலெக்டர் மோகன் தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலம் 6,200 கர்ப்பிணிகள் பயன்கலெக்டர் மோகன் தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:47 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் 6,200 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்


இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோகன் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமுதாய வளைகாப்பு

தமிழக முதல்-அமைச்சர், மகளிருக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு சாதி, மத பேதமின்றியும், பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்றியும் சமுதாய வளைகாப்பு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கியமான நிகழ்வு, அது ஒவ்வொரு பெண்ணுக்கு ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறவியாகும். தாய்மை அடையும் கர்ப்பிணி பெண்களை பாதுகாத்திடும் வகையில் அவர்களுக்கான உதவித்தொகையை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக அரசு உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் ஏழை, எளிய கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ தேவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவை பெற்று பயனடையவும் உதவுகிறது. இதுமட்டுமல்லாமல் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் சார்பில் தேவையான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை பிறந்தவுடன் தாய், சேய் நல பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

6,200 பேர் பயன்

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.300 வீதம் இதுவரை மொத்தம் 6,200 பேருக்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த சமுதாய வளைகாப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 5 வகையான சீர்வரிசை மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணி பெண்களின் உடல்நலம் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் காக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story