முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்குவதாக தெரிவித்து பணம் வசூலிப்பு -நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடிக்கு ஆதாரங்கள் உள்ளன -மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதம்


முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்குவதாக தெரிவித்து பணம் வசூலிப்பு -நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடிக்கு ஆதாரங்கள் உள்ளன -மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதம்
x

நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மதுரை


நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நிதி நிறுவன மோசடி

மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத்தொகையை முதிர்வுத்தொகையாக வழங்குகிறோம் என ஆசை வார்த்தி கூறியுள்ளனர்.

இதை நம்பி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி தரவில்லை என புகார் எழுந்தது. இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவன நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், பல்வேறு நபர்களுக்கு நிலம் வழங்குவதாகவே அட்வான்ஸ் தொகை வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. அதற்குள் சிலர் உள்நோக்கத்தின் காரணமாக மோசடி புகார் அளித்து, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க இயலாது என்று வாதாடினார்கள்.

ஆதாரங்கள் உள்ளன

அதற்கு கூடுதல் அரசு வக்கீல் ரவி ஆஜராகி, நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் என மொத்தம் 25 நிறுவனங்கள் மீதும் அதன் நிர்வாகிகள் 66 பேர் மீதும் மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 278 பேர் புகார் அளித்துள்ளனர். ரூ.64 கோடி வசூலிக்கப்பட்டு மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை 8 பேர் கைதாகி உள்ளனர். இந்த நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் தொகையை வசூலித்து, அதற்கான வட்டி தொகையையும் சிறிது காலம் வழங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த தொகையை நிலம் கிரையத்துக்கான அட்வான்ஸ் தொகை என்பதை ஏற்க இயலாது.

எனவே இந்த விவகாரத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க முடியாது என்பது தவறு. முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்குவதாக தெரிவித்து பணம் வசூலித்து மோசடி செய்ததற்கான ஆதாரங்களும் உள்ளன என்று வாதாடினார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

பின்னர் முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், நிதி நிறுவனம் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலம் வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் செலுத்திய தொகையை திருப்பி தர வேண்டும் என உத்தரவிட வேண்டும் என வாதாடினார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story