செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து: வாலிபர் உயிரிழந்த சோகம்


செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து: வாலிபர் உயிரிழந்த சோகம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 Aug 2022 5:36 AM GMT (Updated: 20 Aug 2022 9:46 AM GMT)

கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் சுந்தரம் மகன் அர்ஜூன்(34). பி.ஏ.(பொருளாதாரம்) பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்தார்.

முன்னதாக அர்ஜூன் இரண்டு சிமெண்ட் சீட்டால் ஆன வீடு ஒன்றை அமைத்து மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று இரவு தனது இரண்டாவது மகன் விவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருக்கவே அருகே சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, மேற்கூரை , இரும்பு தகடால் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்கி உள்ளார்.

நள்ளிரவில் செல்போன் சார்ஜர் வெடித்ததில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ குடிசையில் பரவியதாக கூறப்படுகிறது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் குடிசை வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி மனைவி முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் சுற்றிலும் தென்னை ஓலையால் மறைக்கப்பட்டு இருந்ததாலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததாலும் அர்ஜூனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.


Next Story