காவிரி நீர் விவகாரம்: டெல்லி செல்லும் தமிழக குழுவில் 12 எம்.பி.க்கள்..!


காவிரி நீர் விவகாரம்: டெல்லி செல்லும் தமிழக குழுவில் 12 எம்.பி.க்கள்..!
x

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் டெல்லி செல்கின்றனர்.

சென்னை,

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விடாததற்கு உண்மைக்கு புறம்பாக பல காரணங்களை மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் மனு கொடுப்பார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் நாளை (திங்கட்கிழமை) காலை டெல்லி செல்கிறார். டெல்லியில் ஜல்சக்தி துறை மந்திரி ஷெகாவத்தை சந்தித்து, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கி மனு கொடுப்பதுடன் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி செல்லும் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் அடங்கிய குழு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவின் டி.ஆர்.பாலு, காங்கிரசின் ஜோதிமணி, அதிமுகவின் தம்பிதுரை, மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி ராமதாஸ், தமாகாவின் ஜி.கே.வாசன், சுப்பராயன்(சிபிஐ), ஆர்.நடராசன் (சிபிஎம்), சின்னராஜ் (கொமதேக), நவாஸ் கனி (இ.யூ.மு.லீ) ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நாளை மாலை மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர்.


Next Story