சாதிவெறியுடன் அலையும் ஆதிக்கவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்


சாதிவெறியுடன் அலையும் ஆதிக்கவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x

தமிழக அரசு, சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இனம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூரில் உள்ள வேங்கை வாசல் தெருவில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தேக்க தொட்டியில் இருந்த குடிநீரை குடித்த சிறுவர்கள் உடல் நலன் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் ஆய்வு செய்தபோது, பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் அந்த குடிநீர் தொட்டியில் கயவர்கள் சிலர் மலம் கழித்து வந்தது தெரியவந்தது.

இந்த கொடூர குற்றத்தை செய்த அழுக்கு மனம் படைத்தோர் நாகரிக மனித சமூகத்தில் வாழவே தகுதி அற்றவர்கள். இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது; வெட்கக்கேடானது. இந்த சாதி ஆதிக்க கொடூரத்தை செய்த கொடியவர்கள் யாராக இருந்தாலும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் தண்டனை வழங்கவேண்டும்.

அதுமட்டுமல்ல அதே ஊரில் கோவிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்பதை அறிந்த கலெக்டரும், மாவட்ட போலீஸ் அதிகாரியும் பட்டியல் இன மக்களை கோவிலின் உள்ளே அழைத்துச்சென்று வழிபடச்செய்து, தீண்டாமை கொடுமையை தகர்த்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுகின்ற கொடுமையும் நடக்கிறது. பட்டியல் இன மக்கள் மீதான தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டுக்கே பெருத்த அவமானம்; தலைக்குனிவு.

எனவே தமிழக அரசு, சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இனம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இத்தகைய சமூக இழிவுகளை இனி யாரும் கனவிலும் நினைக்கக்கூடாத நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story