டயர் வெடித்து தீ பிடித்து எரிந்த கார் - 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


டயர் வெடித்து தீ பிடித்து எரிந்த கார் -  4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
x

வேடசந்தூர் அருகே நடுரோட்டில் டயர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம்

வேடசந்தூர்,

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாமனாரான பொன்னம்பலம்(78) என்பவரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன் மாமியார் கீதா(66) என்பவரும் வந்தார்.

காரை சாந்தப்பன்(33) என்பவர் ஓட்டிவந்தார். இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலைகுப்புற கவிழ்ந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். பொன்னம்பலம் இடுப்பிற்கு கீழே பலத்த தீக்காயமடைந்து அவரது 2 கால்களும் கருகியது. டிரைவர் சாந்தப்பனுக்கும் முழங்காலுக்கு கீழே தீக்காயம் ஏற்பட்டது. சந்தோஷ்குமார் மற்றும் கீதா லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாமனாரை சிகிச்சைக்கு அழைத்து செல்லும்போது டயர் வெடித்து கார் தீ பிடித்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.





Next Story