கோவையில் கார் வெடிப்பு: கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு


கோவையில் கார் வெடிப்பு: கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
x

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டு சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் சுமார் 10 பேரிடம் கை மாறியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார் சிலிண்டர் வெடித்த உடனடியாக துப்பு துலக்கினோம். கோவையில் மக்கள் தீபாவளியை கொண்டாட ஏதுவாக காவல்துறை பாதுகாப்பு அதிகப்படுத்தினோம். கோவையில் உள்ள எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு போடப்படிருக்கிறது. சிலிண்டர் விபத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story