எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம்- ஈரோட்டில் சீமான் பேச்சு


எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம்- ஈரோட்டில் சீமான் பேச்சு
x

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம் என்று ஈரோட்டில் சீமான் கூறினார்.

ஈரோடு


எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம் என்று ஈரோட்டில் சீமான் கூறினார்.

தீவிர பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா, மரப்பாலம், மண்டபம் வீதி, மகாஜன பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து மகாஜன பள்ளிக்கூடம் அருகில் நடந்த பொதுக்கூடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றத்தை கொண்டு வர, ஊழல், லஞ்சம் அற்ற, உண்மையும், நேர்மையான நிர்வாகத்தை கொண்டு வர, மண்ணை காக்க, மக்களின் வளத்தை காக்க, எதிர்கால தமிழர்களின் நலத்தை காக்க, எங்களுக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்குமான கடமையும், பொறுப்பும் என உணர்ந்து நாம் இந்த தேர்தலை அணுக வேண்டும்.

நாம் தமிழர்

வாக்கு என்பது மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நாட்டில் வாழுகின்ற குடிமக்களின் கடைசி கருவி. ஒரு வலிமை மிக்க ஆயுதம். அநீதிக்கு எதிராக அந்த ஆயுதத்தை பயன்படுத்துபவன் எவனோ அவனே ஆகச்சிறந்த குடிமகனாக இருக்க முடியும். நீங்கள் சாதி, மதங்களாக பிரிந்து நின்றால் அச்சுறுத்தப்படுவீர்கள். ஆனால் ஒரே இனமாக இணைந்து நின்றால் பாதுகாப்பாக வாழ்வீர்கள்.

மார்க்கம், மதம் எல்லாம் மாறக்கூடியது. ஆனால் மொழியும், இனமும் ஒரு மனிதன் பிறப்பில் இருந்து, இறக்கும் வரை மாறிக்கொள்ளாதது. இனம் தான் நம் அடையாளம். உலகத்திற்கு எங்கு சென்றாலும், நாம் கிறிஸ்தவர்கள் என்றும், இஸ்லாமியர்கள் என்றும் அறிமுகப்படுத்த கூடாது. நாம் தமிழர் என்று அறிமுகப்படுத்த வேண்டும்.

இன உணர்வு

மதத்திற்கு கட்சி வைத்தவர்களை விட, சாதிக்கு இயக்கம் கண்டவர்களைவிட, நாம் பெரும் படையாக திரண்டு நிற்பதற்கு காரணம் என்ன? களத்தில் நிற்க எல்லோரும் பயப்படுகிறார்கள். கல் எறியோ, குண்டு எறியோ, ஈட்டி எறியோ, பீரங்கியோ, துப்பாக்கியோ, எதுவந்தாலும் நெஞ்சை காட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கக்கூடிய மான மறவர்களாக நிற்க காரணம் என்ன? எதற்கும் அஞ்சாத புலிப்படை நாம்.

சாதி, மத உணர்ச்சிகளை பின்னுக்கு தள்ளி, நாங்கள் தமிழர்கள் என்ற இன உணர்வை முன் நிறுத்துவதால் தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிகிறது. சாதி, மதத்தை விட்டுவிட்டு தமிழர்களாக கலைந்து செல்லுங்கள். அத்தனை பேரும் ஒன்றாக செல்வீர்கள்.

புரட்சித்தீ

நான் சாலையில் தனியாக நடந்து சென்றால் விபத்து. நாம் எல்லோரும் இணைந்து சென்றால் போக்கு வரத்து நிறுத்தம். இதுதான் கொள்கை, கோட்பாடு. தனிமரம் தோப்பாகாது. ஆனால் தனித்தனி மரங்கள் ஒன்று இணைந்து தான் தோப்பாகும் அதுவும் உண்மை. விளக்கிலே எரிகிற தீ சிறிய தீ. அடர்ந்த காற்றுக்குள் பற்றி எரிகிற பெருந் தீ புரட்சித்தீ. அதுதான் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி பற்ற வைத்திருக்கின்ற அரசியல் புரட்சித்தீ.

நம்மிடத்தில் ஆகச்சிறந்த கருத்து இருக்கிறது. அவர்களிடம் காசு இருக்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது. நம்மிடம் தன்மானம் மிக்க தமிழர் என்கிற இனம் இருக்கிறது. இது இரண்டிற்கும் தான் இங்கு போர் நடக்கிறது. இது ஒரு புரட்சிகர அரசியல் போர். போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். நாம் தற்போது செய்வது ரத்தம் சிந்தாத போர்.

கரும்பு விவசாயி

அன்பை கொடுத்தவனுக்கு அன்பை கொடு. துன்பத்தை கொடுத்தனுக்கு துன்பத்தை கொடுத்துவிட வேண்டும். வலியை கொடுத்தவனுக்கு அந்த வலியின் அருமையை உணர்த்திவிட வேண்டும். இந்த தேர்தலை நாங்கள் ஒரு மாறுதலாக பார்க்கிறோம். எங்கள் பின்னால் ஒன்றும் இல்லை. எங்களுடைய பின்புலம் எங்களுடைய மொழி. என் இனத்தின் நீண்ட நெடிய வரலாறு. அதுதான் எனக்கு பின்புலம்.

ஒரு முறை எங்களை ஆட்சியில் அமர வைத்து பாருங்கள். என் தாய் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம். பாலியல் தொந்தரவு, சங்கிலி பறிப்பு, கொள்ளை எதுவும் இருக்காது. உங்களை நம்பி நிற்கிற பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் அனைவரும் நமது வேட்பாளர் மேனகாவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களித்து மேனகாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு சீமான் கூறினார்.


Next Story