திறந்தவெளி மதுபான பார்களால் மாணவிகள் அவதி


திறந்தவெளி மதுபான பார்களால் மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 20 Oct 2023 7:45 PM GMT (Updated: 20 Oct 2023 7:46 PM GMT)

தேனி பஸ்நிலையம் பகுதியில் திறந்தவெளி மதுபான பார்களால் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தேனி

திறந்தவெளி மதுபான பார்

தேனி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் தவிர்த்து பல இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்து வருகிறது. போலீசாரும் அவ்வப்போது இதுபோன்ற சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்கின்றனர். இருப்பினும் இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் குடிமகன்கள் அவற்றை டாஸ்மாக் கடை அருகில் உள்ள பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் வைத்து குடித்து விட்டு பாட்டிலை அங்கேயே வீசிச் செல்கின்றனர்.

இதுதவிர, பஸ் நிலையம், கழிப்பிடங்கள், மயான பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் அவற்றை கண்ட இடங்களில் நின்று குடித்துவிட்டு திறந்தவெளியையே மதுபான பார் ஆக மாற்றி வருகின்றனர்.

பஸ் நிலையம்

இதனால் தேனி நகரில் திறந்தவெளி மதுபான பார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுப்பன்தெரு செல்லும் சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இடையில் உள்ள சிறு நடைபாதை, பஸ் நிலையம் பின்புறம், காட்டு பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் சாலை, மதுரை சாலையில் பங்களாமேடு பஸ் நிறுத்தம், பங்களாமேடு திட்டச்சாலை, கொட்டக்குடி ஆற்றுப்பாலம் உள்பட பல்வேறு இடங்களும் திறந்தவெளி மதுபான பார் ஆக மாறியுள்ளது.

அதுபோல் புதிய பஸ் நிலைய வளாகம், அங்குள்ள பூங்கா, புறவழிச்சாலை, திட்டச்சாலைகள் போன்றவையும் திறந்தவெளியில் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் பொது இடங்களில் நின்று மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பரிதவிப்பு

இதனால் பள்ளி, கல்லூரி களுக்கு சென்று வீடு திரும்பும் மாணவிகள், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே, திறந்தவெளி மதுபான பார் ஆக மாற்றுவதை தடுக்க வேண்டும் என்றால், சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க வேண்டும்.

இதற்கு டாஸ்மாக் கடைகளில் தனி நபர்களுக்கு மொத்தமாக மதுபானம் விற்பனை செய்வதை கண்டறிந்து தடுக்க வேண்டும். மாலை நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

எனவே, நகரின் அழகிற்கும், பெண்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இத்தகைய செயல்பாடுகளை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story