செங்கல் சூளை அதிபர் விபத்தில் பலி


செங்கல் சூளை அதிபர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 14 Aug 2023 9:15 PM GMT (Updated: 14 Aug 2023 9:15 PM GMT)

எரியோடு அருகே செங்கல் சூளை அதிபர் விபத்தில் பலியானார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 27). செங்கல் சூளை அதிபர். நேற்று முன்தினம் மாலை இவர், எரியோடு பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். எரியோடு-அய்யலூர் சாலையில், ஒத்தப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கருப்புசாமி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story