மின்சாரம் தாக்கி காதலன் சாவு... துக்கத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை


மின்சாரம் தாக்கி காதலன் சாவு... துக்கத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை
x

காதலன் இறந்த வேதனையால் கடந்த சில நாட்களாக விஜயலட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

விக்கிரவாண்டி,

நாமக்கல் அருகே உள்ள பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகள் விஜயலட்சுமி (வயது 20). இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பாரா மெடிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர், அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்கிருந்து தினசரி கல்லூரிக்கு சென்று வந்தார். இவர் சேலம் மாவட்டம் வீராணத்தை சேர்ந்த உறவினரான வினோத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வினோத் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கதறி அழுதார். மேலும் காதலன் இறந்த வேதனையால் கடந்த சில நாட்களாக விஜயலட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 21-ந்தேதி விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் இருந்த விஜயலட்சுமி, திடீரென விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவருடன் தங்கி இருந்த சக மாணவிகள் உடனே, அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலன் இறந்த துக்கத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story