கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் 10 நாட்களுக்கு பிறகு மீட்பு


விசைப்படகு கடலில் மூழ்கியதால் மாயமான 2 குமரி மீனவர்களில் ஒருவரின் உடல் 10 நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

குளச்சல்:

விசைப்படகு கடலில் மூழ்கியதால் மாயமான 2 குமரி மீனவர்களில் ஒருவரின் உடல் 10 நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலில் மூழ்கிய விசைப்படகு

குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடன் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) பங்குத்தாரராக உள்ளார். இந்த விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 மீனவர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். இவர்கள் கடந்த 28-ந் தேதி நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் விசைப்படகு ஒரு பக்கமாக சரிந்து கடலில் மூழ்கியது. உடனே உஷாரான மீனவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தனர். அவர்கள் கரையை நோக்கி நீந்தியவாறு தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

3 பேர் மாயம்

அந்த சமயத்தில் அங்கு மீன் பிடிக்க சென்ற குளச்சலை சேர்ந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் அருகே சென்று கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 3 மீனவர்கள் மாயமானார்கள்.

மாயமான 3 பேரையும் தேடி வந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மீனவர் பயஸின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மாயமான ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 10 நாட்களாக மீனவர்கள் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்கள் உடல்கள் மீட்கப்படவில்லை. இதனால் கப்பல் மூலம் தேட முடிவு செய்யப்பட்டது.

உடல் மீட்பு

இதற்காக விசாகப்பட்டணத்தில் இருந்து கப்பற்படை கப்பல் நேற்று மணப்பாடு கடல் பகுதிக்கு சென்றது. பின்னர் மீனவர்களை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒருவரது உடல் மீட்கப்பட்டது. அது சிதைந்த நிலையில் இருந்ததால் யாருடைய உடல் என்று உடனே அடையாளம் காண முடியவில்லை. உடலை கரைக்கு கொண்டு வந்த பின்பு தான் அடையாளம் காண முடியும் என கப்பற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட உடல் இன்று (திங்கட்கிழமை) காலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் கரை சேர்க்கப்படும். அங்கு உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிைடயே மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலில் மூழ்கி 10 நாட்கள் கடந்த நிலையில் மீனவர் பிணமாக மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story