பா.ம.க. நிர்வாகி கைது - தி.மு.க அரசியல் பழிவாங்கலின் உச்சம்: அன்புமணி ராமதாஸ்


பா.ம.க. நிர்வாகி கைது - தி.மு.க அரசியல் பழிவாங்கலின் உச்சம்: அன்புமணி ராமதாஸ்
x

தேர்தல் பொய் வழக்கில் பா.ம.க. நிர்வாகியை மத்திய பிரதேசத்திற்கு சென்று கைது செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில், வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியை மத்தியப் பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை. கள்ளச்சாராய வணிகர்களையும், கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்வதற்கு திறனற்ற காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறி, பா.ம.க. நிர்வாகியை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடிச் சென்று கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் கடந்த ஜூலை 1-ஆம் நாள் நான் பரப்புரை மேற்கொள்ளச் சென்ற போது, எனது கூட்டத்தில் பங்கேற்க முடியாத வகையில் அங்குள்ள மக்களை திமுகவினர் அவர்களால் உருவாக்கப்பட்ட பட்டியில் அடைத்து வைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களை அவசரம், அவசரமாக வேறு இடத்திற்கு திமுகவினர் அழைத்துச் சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பா.ம.க. தேர்தல் அலுவலகத்தை செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி தலைமையிலான குண்டர்கள் சூறையாடினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. நிர்வாகிகளையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இது தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேர் மீது கஞ்சனூர் காவல் நிலையத்தில் பா.ம.க.வினர் புகார் அளித்தனர். ஆனால், அதன் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. மாறாக, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் மீது திமுகவினர் கொடுத்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பொய்வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். அந்த வழக்கில் தான் 20 நாட்களுக்குப் பிறகு அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் இளங்கோவன், திருநாவுக்கரசு ஆகியோரை கஞ்சனூர் காவல்துறையினர் கடந்த 22-ஆம் தேதி கைது செய்துள்ளனர். இந்த பொய் வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்ட காணை மேற்கு ஒன்றிய பா.ம.க. துணை செயலாளர் முருகவேல், அவரது ஊர் மக்களுடன் வட மாநில சுற்றுலா சென்று விட்டு 22-ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் மாவட்டம் இட்டார்சி தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி ஏறுவதற்காக ஊர் மக்களுடன் காத்திருந்த போது, அவரை காவல்துறை கைது செய்து விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருக்கிறது.

மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப் பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த கடமை உணர்வை எல்லா வழக்குகளிலும் காட்டினால் தமிழ்நாடு சட்டம் & ஒழுங்கில் சிறந்து, சொர்க்கபுரியாக மாறி விடும். ஆனால், ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற கஞ்சா வியாபாரிகள், கள்ளச்சாராய வணிகர்கள் ஆகியோரிடம் மட்டும் இந்த காவல்துறை கணிவுடன் நடந்து கொள்கிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், திமுகவினர் தூண்டி விட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப் பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது? காவல்துறையினரின் இந்த செயல் அவர்கள் அணிந்திருக்கும் சீருடைக்கு இழுக்கு; நேரமையாக பணி செய்வதாக ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு களங்கம் ஆகும்.

1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கலைஞர், காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி சட்டப்பேரவையில் பேசும் போது, ''காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகி விட்டது'' என்று கூறினார். ஆனால், இப்போது ஈரல் மட்டுமல்ல, மூளை, இதயம் உள்பட காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. ஒருவேளை, இது பொய் என்றால், பொய்வழக்கில் எவ்வளவு விரைவாக செயல்பட்டு பா.ம.க.வினரை கைது செய்தார்களோ, அதேவேகத்தில் பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story