பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x

பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் தாமரை முருகன் (வயது 48). பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாமரை முருகன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் பயங்கர சத்தத்துடன் வெடித்த பெட்ரோல் குண்டு, காரின் பின்பக்க டயரில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

டயர் எரிந்தது

இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த தாமரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதை அறிந்த மர்மநபர்கள் உடனே அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதற்கிடையே தாமரை முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதில் காரின் பின்பக்க டயர் மட்டும் எரிந்து சேதமானது.

போலீசார் விசாரணை

இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெட்ரோல் குண்டு வீச்சில் சேதமடைந்த காரை பாா்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோத தகராறில் யாரேனும் பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story