உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு


உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு
x

உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வடைந்தது. இதில், வெள்ளைக்கொடி இளம்பயிர் சுமை ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

கரூர்

வெற்றிலை விவசாயிகள்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலைகளை சாகுபடி செய்துள்ளனர். பின்னர் கூலியாட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர்.

அதன் பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை

இந்தநிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story