டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை


டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை
x

சாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு பார் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற 2 பேைர போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பஸ் நிலையம் அருகில் ரெயில்நிலையம் செல்லும் ரோட்டில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக்கடையின் பின்புறம் பார் செயல்பட்டு வருகிறது. இதில் இருக்கன்குடியை சேர்ந்த காந்திராஜன் (வயது 35) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று பகல் 11 மணிக்கு காந்திராஜன் வேலைக்கு வந்தார். மதியம் 12 மணிக்குத்தான் டாஸ்மாக் கடை திறக்கும் என்பதால் காந்திராஜன் டாஸ்மாக் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு 2 பேர் வந்தனர். காந்திராஜனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.இதில் பலத்த காயம் அடைந்த காந்திராஜன் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தின் அருகில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அந்த பகுதியில் இருந்தவர்கள், காந்திராஜனை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கொலையாளிகள் கோவில்பட்டியை நோக்கி தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story