நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை..!


நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை..!
x

சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வந்தது. இந்த ஓட்டலில் இருந்து சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் ஓட்டலுக்கு சென்று சவர்மா உள்ளிட்ட உணவு வகைகளை பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர்.

அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தயாரிக்க தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட உணவக உரிமையாளர் நவீன் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story