கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மகள், மருமகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மகள், மருமகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி ராஜவல்லி(வயது 80). இவருக்கு பீமாராவ் (56), ராமாராவ்(50) என்கிற 2 மகன்களும், சஞ்சய் காந்தி (54) என்கிற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜவல்லி, தனது மகள் சஞ்சய் காந்தி, மருமகளான ராமாராவ் மனைவி கயல்விழி ஆகியோருடன் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடன் அங்கிருந்த சிதம்பரம் நகர போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினர்.
நிலம் விற்பனைஅப்போது அவர்கள் கூறுகையில், ராஜவல்லிக்கு சொந்தமாக அதித்யா நல்லூர் கிராமத்தில் நிலம் உள்ளது. வயது முதிர்வால் கண்பார்வை பாதிக்கப்பட்டு இருந்த ராஜவல்லியிடம், மூத்தமகனான பீமாராவ் கையெழுத்து பெற்று, வேறு ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டார். இது, ராஜவல்லிக்கு தெரியாது.
சில நாட்களுக்கு பிறகு தெரியவந்ததை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நிலத்தை மீட்க வேறு வழி தெரியாமல் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கூறி, சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.