கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரி ஒருவரையாவது பணி நீக்கம் செய்ய வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு கருத்து


கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரி ஒருவரையாவது பணி நீக்கம் செய்ய வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு கருத்து
x

கோர்ட்டு உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணி நீக்கம் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.

மதுரை,

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஞானம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது:-

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2014-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ செலவு ரூ.9 லட்சத்தை காப்பீட்டு தொகையில் வழங்குமாறு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மருத்துவ செலவினத்தொகையை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தற்போது வரை அந்த தொகை வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

துறை ரீதியாக நடவடிக்கை

வழக்கு விசாரணையின் போது, அப்போதைய நெல்லை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் கோர்ட்டில் ஆஜராகியிருந்தார். அப்போது, மனுதாரரின் கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டதால் காலதாமதம் ஏற்பட்டு விட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு பஸ்களில் பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நடத்துனர் டிக்கெட் பண்டலை தொலைத்து விட்டால், அவரை பணியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது. ஆனால், மருத்துவ துறையில் ஒரு உயரதிகாரி ஆவணங்களை தொலைத்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத இதுபோன்ற அதிகாரிகளில் ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இது அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். பணியில் உள்ள அரசு அதிகாரிகளை சரி செய்ய வேண்டியுள்ளது. கோர்ட்டு உத்தரவுகளை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தயங்குவது ஏன்? காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டியதை அவர்களது சொந்த பணத்தை செலவழிப்பது போல நினைத்துக்கொள்கின்றனர் என நீதிபதி கடும் விமர்சனம் செய்தார். அத்துடன் ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் வழக்கும் முடித்து வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.


Next Story