வேடசந்தூரில் தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்; அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது
வேடசந்தூரில் தி.மு.க. நிர்வாகியை தாக்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொய் வழக்கு போட்டதாக அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வேடசந்தூரில் தி.மு.க. நிர்வாகியை தாக்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொய் வழக்கு போட்டதாக அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தி.மு.க. நிர்வாகி
வேடசந்தூர் அருகே கீழ்மாத்தினிபட்டியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). தி.மு.க. பிரமுகர். நேற்று முன்தினம் இரவு இவர், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், கவுதமிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கவுதம் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் அளித்தார். அதன்பேரில் கவுதமை தாக்கியதாக ஆத்துமேட்டை சேர்ந்த மருதுபாண்டி (24), பெரியசாமி (23), சக்திவேல் (20) உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதில் தொடர்புடையதாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளரான சேட்டை கார்த்தி என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதற்கிடையே சேட்டை கார்த்தி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி வேடசந்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் பாபுசேட், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளர் மாரம்பாடி போஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் சிலர் நேற்று வேடசந்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இருப்பினும் போலீசார் சேட்டை கார்த்தி உள்பட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலாயுதம், ஜெயராணி மற்றும் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் ஏற்றி, வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் வேடசந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.