ஆம்ஸ்ட்ராங் படுகொலை: உடன் இருந்தவர்களே உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சி - பா.ரஞ்சித்


ஆம்ஸ்ட்ராங் படுகொலை: உடன் இருந்தவர்களே உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சி - பா.ரஞ்சித்
x

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று பா.ரஞ்சித் தெரிவித்தார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அந்த கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

மேடையில் பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், "ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இதன்மூலம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விரைவாக செயல்படுவதற்கான தேவையை ஏற்படுத்தி உள்ளோம். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். அதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. மக்கள் கேள்வி எழுப்பியதால் அரசு பயந்து போய், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த நபர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன், "ஆம்ஸ்ட்ராங் அனைவரையும் சமமாக பார்த்தவர். கொரோனா காலத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர் கட்சியை விட இரு மடங்கு ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்தவர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படையை இயக்கிய அரசியல் புள்ளிகள், பணத்தை பரிமாறியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும். விசாரணையில் தொய்வு ஏற்பட்டால் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வோம். ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்கள். இதுகுறித்து, ஐ நாசபையிலும் பேச வைப்பேன். போலீஸ் விசாரணை தொய்வு ஏற்பட்டால் நாங்கள் நீதி கேட்போம். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.


Next Story