தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் பழனி தகவல்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

இதுகுறித்து கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக பட்டாசு கடைகள்

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 2008-ம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவர்கள் உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் கோரும் இடத்திற்கு தொடர்புடைய தாசில்தாரின் கருத்துரை, மனுதாரின் மனு, படிவம்- ஏ.ஈ-5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பம், லைசென்ஸ் என்ஜினீயர் மூலம் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஒப்பந்தம்), ரூ.20-க்கான முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் உரிமக் கட்டணம் ரூ.600-யை உரிய அரசு கணக்கில் இ-செலான் மூலமாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துச்சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்-2, சேவை கட்டணமாக ரூ.500 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு உத்தரவின்படி தற்காலிக பட்டாசு உரிமம் கோரி பொது இ-சேவை மையங்கள் மூலம் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story