அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! - அமைச்சர் தங்கம் தென்னரசு டுவீட்


அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! - அமைச்சர் தங்கம் தென்னரசு டுவீட்
x

துலுக்கர்பட்டியில் 2-வது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடந்த பணியின்போது ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி 2-வது கட்ட அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த அகழாய்வு பணியின்போது தமிழ் எழுத்துகளில் புலி என்று பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரையிலும் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சென்னையில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும் இரும்பு கால புதைவிட பகுதியில் வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், துலுக்கர்பட்டி அகழாய்வு குறித்து நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் 'புலி' என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் 'திஈய', 'திச', 'குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story