அதிமுக பொதுக்குழு: உச்சகட்ட பரபரப்பு; பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர் செல்வம்


அதிமுக பொதுக்குழு: உச்சகட்ட பரபரப்பு; பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 23 Jun 2022 7:10 AM GMT (Updated: 23 Jun 2022 7:56 AM GMT)

அதிமுக பொதுக்குழுவில் உச்சகட்ட பரபரப்பாக, பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்.

சென்னை,

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். ஒற்றை தலைமை நாயகன் என பழனிசாமியை குறிப்பிட்டு ஜெயக்குமார் மேடையில் பேசினார்.

தற்காலிக அவைத்தவைராக உள்ள தமிழ்மகன் உசேனை கட்சியின் அவைத்தலைவராக தேர்வு செய்தது பொதுக்குழு.

இதன்பின் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இந்நிலையில் பொதுக்குழுவில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் வைத்திலிங்கம் கோஷமிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய வைத்திலிங்கம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து வெளியேறினர்.

அதிமுக பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய ஒ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து பரபரப்பான சூழலில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவுபெற்றது.


Next Story