வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம்


வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம்
x

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் படித்த பட்டதாரிகளை, வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பட்டதாரி இளைஞர்கள் வங்கி கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள, மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை, வங்கி கடன் ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடும் மையம், இயற்கை மற்றும் உயிர் பூச்சிக்கொல்லிகள் வினியோகம், மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை மையம் அமைத்தல், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தல் முதலியவற்றுக்கு வேளாண் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க மானியம் வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் விவரங்களை https://agriinfra.dac.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம். பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்து கூடுதல் விவரம் அறிய https://pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story