அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மயக்கம்


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மயக்கம்
x

கோப்புப்படம் 

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கே.பி.அன்பழகனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்திற்கு பிறகு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் அ.தி.மு.க.வினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அறையில் வைத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த மருத்துவ குழுவினர் எடப்பாடி பழனிசாமி அறையில் வைத்து அன்பழகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து அவர் தனது காரில் மருத்துவமனைக்கு சென்றார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கே.பி.அன்பழகனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story