நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருடியதாக புகார்: வேலைக்காரர் மீது கொலை மிரட்டல் வழக்கு - கைது செய்யப்படுவாரா? போலீஸ் விசாரணை தீவிரம்


நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருடியதாக புகார்: வேலைக்காரர் மீது கொலை மிரட்டல் வழக்கு - கைது செய்யப்படுவாரா? போலீஸ் விசாரணை தீவிரம்
x

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருடியதாக வேலைக்காரர் மீது அவர் புகார் அளித்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்னை

உத்தம வில்லன், என்னை அறிந்தால் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் திருட்டு போய் விட்டது. விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், லேப்-டாப் போன்றவை திருட்டு போய் விட்டதாகவும், வீட்டு வேலைக்காரர் சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்டோர் மீது சந்தேகம் இருப்பதாகவும், பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். இதையொட்டி வீட்டு வேலைக்காரர் உள்ளிட்ட 5 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வேலைக்காரர் சுபாஷ்சந்திர போசும், நடிகை பார்வதி நாயர் மீது பதிலுக்கு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதற்கிடையில் சமீபத்தில், வேலைக்காரர் சுபாஷ்சந்திரபோஸ் மீது நடிகை பார்வதி நாயர் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், தனது புகழை கெடுக்கும் வகையில் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும், தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வருவதாகவும், இதற்கு காரணம் சுபாஷ்சந்திரபோஸ் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் அடிப்படையில், சுபாஷ்சந்திரபோஸ் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் 2-வது வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுபாஷ்சந்திரபோஸ் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.


Next Story