கள்ளழகர் பெருமாளுக்கு நூபுரகங்கை தீர்த்தத்தில் அபிஷேகம்


கள்ளழகர் பெருமாளுக்கு நூபுரகங்கை தீர்த்தத்தில் அபிஷேகம்
x

அழகர்கோவில் திருபவுத்திர திருவிழாவில் கள்ளழகர் பெருமாளுக்கு நூபுரகங்கை தீர்த்தத்தில் அபிஷேகம் நடந்தது

மதுரை

அழகர்கோவில்

அழகர்கோவில் திருபவுத்திர திருவிழாவில் கள்ளழகர் பெருமாளுக்கு நூபுரகங்கை தீர்த்தத்தில் அபிஷேகம் நடந்தது.

திருபவுத்திர திருவிழா

மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறைநாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் திருப்பவுத்திர திருவிழா நடைபெறுவது உண்டு. இதில் நேற்று காலையில் மூலவர் சன்னதி முன்பாக உள்ள மண்டப வளாகத்தில் 108 வெள்ளி கலசங்கள் புனிதத்தீர்த்தத்துடன் வைக்கப்பட்டது. அதன் மீது தேங்காய், பழம், மாவிலை, தாம்பூலம், வண்ணப்பூக்கள், மாலைகளால் கலசங்களும், கும்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் உற்சவ கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு 136 வகையான வாசனை திரவியங்கள் மூலிகைகள் இணைந்த பூஜைகள் நடந்தது. மேலும் நெய், தேன், பால், புஷ்பம், இளநீர், மஞ்சள், துளசி உள்ளிட்ட 36 வகையான பொருட்களுடன் அபிஷேகங்களும், நூபுரகங்கை புனித தீர்த்ததுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகள் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

அலங்காரம்

இதைதொடர்ந்து கள்ளழகர் பெருமாள், சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். மேலும் மாலையில் உற்சவர் சாமி சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி இருப்பிடம் போய் சேர்ந்தது. முன்னதாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த திருபவுத்திர பட்டு நூல், மாலைகள் மூலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராச பெருமாளுக்கும் மற்றும் கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாளுக்கும் அணிவிக்கப்பட்டது.

இந்த திருப்பவுத்திர திருவிழா வருகிற 10-ம் தேதி பவுர்ணமி நிறை நாளில் 5 நாட்கள் நடந்து முடிந்து நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story