வாலிபர் அடித்துக்கொலை?


வாலிபர் அடித்துக்கொலை?
x

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பாடாலூர்:

துர்நாற்றம் வீசியது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே இரூரில் தனியார் கிரஷருக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள புதரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், துர்நாற்றம் வீசியது. நேற்று மதியம் அந்த வழியாக சென்றவர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் இது குறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அந்த வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள், கருப்பு நிறங்களில் கோடு போட்ட டீசர்ட்டும் அணிந்திருந்தார். பேண்ட் முழுவதும் மண்ணாக காணப்பட்டது.

உடலில் காயங்கள்

மேலும் இறந்து கிடந்த நபரின் இடது கை மணிக்கட்டு எலும்பு உடைந்துள்ளது. முகத்தில் பலத்த அடிபட்டிருந்தது. வயிற்று பகுதியில் இருந்து குடல் வெளியே வந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவரை யாரேனும் அடித்து கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story