புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது


தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கம், ஊராட்சியில் உள்ளது அன்னுகுடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக அன்னுகுடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த பள்ளியில் அன்னுகுடி, குலமாணிக்கம், வேற்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

புயலில் சேதம் அடைந்தது

இந்த பள்ளி கட்டிடம் கடந்த 2018-ம் ஆண்டில் வீசிய கஜா புயலின் போது சேதம் அடைந்தது. கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் தடுப்பு தூண்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக அந்த பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது. சமுதாய கூடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதிய கட்டிடம் கட்டப்பட்டது

இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு அதே இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.

இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பெற்றோர்களும், கிராம மக்களும் நன்றி தெரிவித்தனர்.


Next Story