குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டதால் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை


குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டதால் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை
x

குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டதால் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

மனைவியுடன் தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கங்கையம்மாள் (42), இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் தனது மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். பெற்றோருக்கு இடையே தகராறு ஏற்பட்டால் அதனை பாலகிருஷ்ணன் சமாதானம் செய்து வைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் கத்தியை எடுத்து வந்து இருவரில் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க வேண்டும் என்று கூறி மனைவியை குத்த போவதாக மிரட்டி உள்ளார்.

கத்தியால் குத்தி தற்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் தனது தந்தை தொடர்ந்து தகராறு செய்து வருவதால் அசிங்கமாக உள்ளதாக கூறி யாரும் சாக வேண்டாம். நான் சாகிறேன். கத்தி யார் குத்தினாலும் குத்தும் என்று கூறி தந்தையின் கையில் இருந்த கத்தியை பறித்த பாலகிருஷ்ணன் திடீரென தனது மார்பில் வேகமாக குத்தி கொண்டார். இதில் அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தையிடம் இருந்த கத்தியை வாங்கி மகனே தனது மார்பில் குத்தி இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story