சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் 9 ஆயிரம் போலீசார் குவிப்பு


சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் 9 ஆயிரம் போலீசார் குவிப்பு
x

File image

சென்னையில் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

நாடு முழுவதும் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார்.

அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் என்.கண்ணன், ஆர். சுதாகர், கே.எஸ். நரேந்திர நாயர் ஆகியோர் மேற்பார்வையில் காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9 ஆயிரம் காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது. அதேபோல மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story