75-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு


75-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Aug 2022 5:28 AM GMT (Updated: 9 Aug 2022 5:34 AM GMT)

75-வது சுதந்திர தினத்தையொட்டி விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வரும் 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் வியாபார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனா்.

வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் திவீரமாக சோதனை செய்து வருகின்றனா்.


விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமுலில் இருக்கும். தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13,14,15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story