கதண்டுகள் கடித்து 6 பேர் படுகாயம்


கதண்டுகள் கடித்து 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:47 PM GMT)

கோட்டூர் அருகே கதண்டுகள் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே கதண்டுகள் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கதண்டுகள் கடித்தது

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாவட்டக்குடி, ஆலாத்தூர், விக்கிரபாண்டியம், பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாடம் வேலைக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்

இந்த நிலையில் நேற்று பெரியகுடியைச் சேர்ந்த காவியா (வயது17) வர்ஷா (19), சேந்தமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் (40), நெருஞ்சினங்குடியை சேர்ந்த துரையப்பன் உள்பட 6 பேர், நெருஞ்சனக்குடி சாலை வழியாக கோட்டூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் நடந்து சென்ற 6 பேரையும் கடித்தது.

6 பேருக்கு சிகிச்சை

இதில் படுகாயம் அடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து இருள் நீக்கி ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த தகவலின் பெயரில் கோட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பனை மரங்களில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை அழித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story