தீபாவளி சீட்டு நடத்தி 400 பேரிடம் பணமோசடி


தீபாவளி சீட்டு நடத்தி 400 பேரிடம் பணமோசடி
x

தீபாவளி சீட்டு நடத்தி 400 பேரிடம் பணமோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

மலைக்கோட்டை:

தீபாவளி சீட்டு

திருச்சி கீழ ஆண்டார் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தின்பேரில் ஒருவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவர் மலைக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களிடம் வாரந்தோறும் ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.1000 வரை 52 வாரங்கள் வசூல் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் வசூல் செய்த, பணத்தை உரியவர்களுக்கு கொடுப்பதற்காக தினமும் குறிப்பிட்ட நபர்களுக்கு டோக்கன் கொடுத்து, பின்னர் பணத்தை கொடுத்து வந்துள்ளார். இதில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பலர் தங்களுக்கு பணத்தை முதலில் கொடுக்க வேண்டும் என்று கூறி பிரச்சினை செய்துள்ளனர்.

போலீசில் புகார்

இதனால் அவர் சிலருக்கு மட்டும் பணத்தை கொடுத்ததாகவும், மற்றவர்களுக்கு அவரால் குறிப்பிட்ட தேதியில் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இதன் மூலம் அவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சீட்டு பணம் கட்டியவர்கள் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மேலும் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை உடனடியாக கண்டுபிடித்து தங்களின் பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தி தீபாவளி சீட்டு கட்டிய சுமார் 400 பேர் நேற்று திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு திடீரென ஒன்று திரண்டு புகார் கொடுத்தனர்.

போராட்டம்

ஒரு கட்டத்தில் அவர்களில் சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story