கன்னியாகுமரி: கடலில் குளித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு


கன்னியாகுமரி: கடலில் குளித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 May 2024 8:29 AM GMT (Updated: 6 May 2024 12:09 PM GMT)

கன்னியாகுமரி அருகே லெமூர் கடலில் குளித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடலில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளும் பொது மக்களும் செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடல் பகுதிக்கு திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர், மாணவிகள் 6 பேர் என 12 பேர் இன்று காலையில் சுற்றுலா வந்துள்ளனர்.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் இன்று காலை திற்பரப்பு அருவிக்கு சென்றனர். தண்ணீர் குறைவாக கொட்டியதால் அங்கிருந்து ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தவ ஆறு பேரை ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், விரைந்து சென்று இழுத்து செல்லப்பட்ட சர்வதர்ஷித் மற்றும் நேசி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன் ஷாம், வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி ஆகிய 4 பேரும் மாயமான நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின. அதேநேரம், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சர்வதர்ஷித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்தனர். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story