கள்ளக்காதலை கைவிடாததால் 2-வது மனைவி வெட்டிக்கொலை: மீனவர் வெறிச்செயல்


2-வது மனைவி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 18 May 2024 12:00 AM GMT (Updated: 18 May 2024 12:00 AM GMT)

மீன்பிடி தொழிலுக்காக ரமேஷ் அடிக்கடி சவுதி அரேபியா நாட்டிற்கு சென்று வந்ததாக தெரிகிறது.

கடலூர்,

கடலூர் முதுநகரில் கள்ளக்காதலை கைவிட மறுத்த 2-வது மனைவியை வெட்டிக்கொலை செய்த மீனவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் முதுநகர் சோனாங்குப்பம் சுனாமிநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). மீனவர். இவருடைய மனைவி இந்துமதி. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் ரமேஷ் இந்துமதியின் தங்கை சூர்யா (33) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜஸ்ரீ (10) என்ற மகளும், பிஷ்வந்த் (3½) என்ற மகனும் உள்ளனர்.

மீன்பிடி தொழிலுக்காக ரமேஷ் அடிக்கடி சவுதி அரேபியா நாட்டிற்கு சென்று வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சூர்யா, கடலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். தினமும் காலையில் வேலைக்கு செல்வதும், இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வருவதுமாகவும் இருந்தார்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த சூர்யாவின் தாய் கலையரசி, ரமேஷ் ஆகிய 2 பேரும் சூர்யாவை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ரமேசுக்கும், சூர்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

அதன்பிறகு ரமேசும், சூர்யாவும் சோனகர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனிகுடித்தனம் நடத்தி வந்தனர். அப்போதும் சூர்யா, அந்த நபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக தெரிகிறது. இதை மீண்டும் ரமேஷ் கண்டித்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் ரமேசுக்கும், சூர்யாவுக்கும் இடையே சண்டை வந்ததாக தெரிகிறது. இதில் ரமேஷ் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு சூர்யா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, ரமேஷ் அவரை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த சூர்யா, துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து ரமேஷ் தப்பி ஓடி விட்டார்.

இதற்கிடையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்த குழந்தைகள், இது பற்றி தனது பாட்டி கலையரசிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு சூர்யா இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர். இருப்பினும் கள்ளக்காதல் விவகாரத்தில் 2-வது மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story